Tuesday, June 20, 2017

🌹 பக்தியில் சிறந்த பாணாசுரனும் மற்றும் 🌸 சிவனுக்கும் கிருஷ்ணருக்கும் வந்த யுத்தமும்


🌼 சனிப்பிரதோஷ நன்னாளில் இப்பதிவை வெளியிட பெருமிதம் கொள்கிறேன்

🌼 பாணாசுரன் பலிச்சக்ரவர்த்தியின் 100 புதல்வர்களில் மூத்தவன், பெரும் சிவபக்தன், ஞானியும் கூட சோனிதபுரம் எனும் நகரத்தை அமைத்து ஆண்டுவந்தான்

🌼 சிவபெருமானின் தாண்டவத்தின்போது மற்றும் சிவன் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தின்போது தேவர்கள் புடைசூழ பர்வத ராஜனை நோக்கி செல்கையில் பாணாசுரன் மிருதங்கம் வாசித்தபடி வந்தான் என சிவபுராணம் கூறுகிறது

🌼 தனுவின் புத்ரர்களான அசுரர்களே பூமியில் அவதரித்தனர் என பாரதம் கூறுகிறது

🌼 அவ்வாறே நரகாசுரன், கம்சன், பாணாசுரன், ஜராசந்தன், சிசுபாலன் இவர்கள் ஐவரும் சிறந்த நண்பர்களாக விளங்கினார்கள் மேலும் தனித்தனியே ஒவ்வொருவரும் தேவர்களை வெல்லும் அளவிற்கு திறன் கொண்டு இருந்ததால் அசுர குலம் செழித்தோங்கியது இதனால் பகவானுக்கு இவர்களை அழிக்கவேண்டியது கடமையாயிற்று

🌼 அவ்வாறே பாணாசுரன் சிறந்த பக்தனானாலும் அவனால் அசுரர்கள் அட்டூழியம் வளர்ந்தது

🌼 பாணாசுரனுக்கு சிவபெருமானின் அருளால் ஆயிரம் கைகள் வந்தடைந்தன மேலும் ஈசன் தாண்டவத்தின் போது தனது ஆயிரம் கரங்களாலும் மிருதங்கம் வாசித்து ஈசனின் மனதை குளிர்வித்ததால்  வேண்டிய வரத்தை கேட்குமாறு கூறப்பட்டபோது " தன்னை ஈசனே தன் நகரத்தில் இருந்து காக்க வேண்டும் " என்ற வரத்தை பெறுகிறான்

🌼 இதனாலும் பாணாசுரனின் ஆயிரம் கரங்கள் மற்றும் அவரின் பராக்கிராமத்தினாலும் பாணாசுரனை எதிர்ப்பவர் இல்லை என்ற நிலை

🌼 இதனால் ஈசனிடம் செல்லும் பாணாசுரன் சிவபெருமானிடம் " தனது வீரத்திற்கு வேலை இல்லாமல் இருப்பதாகவும் தன்னுடன் யாரும் யுத்தம் புரிய வருவதில்லை என்றும் இதனால் தனக்கு யுத்தம் செய்ய வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் ஒரு மலையை தரைமட்டமாக்குவதாகவும் தன்னை வெல்ல சிவபெருமானால் மட்டுமே முடியும் என்றும் வேறு ஒருவரும் இல்லை " என்றும் கூறுகிறான்

🌼 இதைக்கேட்ட ஈசன் " தான் இல்லாமல் உன்னை வெல்லும் ஒருவனை நீ காண்பாய் அப்போது உனது புவி வாழ்வு முடியும் அதன்பின் உன் கொடியும் பறக்காது. எந்த ஒரு காரணமும் இல்லாமல் உனது மயிரத்துவஜம் என்று விழுகிறதோ அப்போது பேய்களே வியக்கும் யுத்தம் நடக்கும் " என்று பாணாசுரனிடம் கூறுகிறார்

🌼 பாணாசுரனுக்கு உஷா என்றொரு பெண் இருந்தாள் அவளை பாணாசுரன் சிறுவயதில் இருந்தே ஆண்கள் பற்றி தெரியாமலே ஒரு கோட்டையில் வளர்த்து வந்தான் அங்கு எந்த ஒரு ஆணுக்கும் அனுமதி இல்லை பாணாசுரன் தவிர

🌻 ---- (அந்த கோட்டைக்கு அக்னிகார்ஹ் என்று பெயர் இந்த இடம் இன்றும் அசாமில் சுற்றுலாஸ்தலமாக உள்ளது இங்கு இந்த நிகழ்வுகள் சிலை வடிவில் உள்ளன)

🌼 ஒரு முறை பார்வதி தேவி சிவனுடன் இருப்பதை கண்ட உஷா தனக்கு கணவன் யார் என பார்வதி தேவியை கேட்க " வைகாசி மாத சுக்லபட்ச துவாதசியன்று அவள் கனவில் வரபோரவனே அவள் கணவன் " என்கிறார்

🌼 இந்நிலையில் உஷா அந்த தினத்தில் கிருஷ்ணரின் பேரனான அநிருத்தனை கனவில் கண்டு காதல் வயப்படுகிறார் இதனால் மாயத்தில் சிறந்த அவள் தோழியான சித்ரலேகா மாயத்தினால் அநிருத்தனை கவர்ந்து யாரும் அறியாமல் உஷாவிடம் சேர்க்கிறாள்

🌼 உஷாவின் செயல்களில் ஏற்பட்ட மாற்றத்தால் இச்செயல் பாணாசுரனுக்கு செல்கிறது இந்நிலையில் பாணாசுரன் உஷாவை பார்க்க வரும்போது அநிருத்தனும் உஷாவும் இருப்பதை காண்கிறான்

🌼 இந்நிகழ்வை எவர் கண்டாலும் கோபம் வரும் ஆயுரம் கையுடைய பாணாசுரனுக்கு சொல்லவா வேண்டும் உடனே அநிருத்தனை சிறைபிடிக்க உத்தரவிடுகிறான் ஆனால் அநிருத்தன் வருபவர்கள் அனைவரையும் கொல்கிறான் இதனால் பாணாசுரன் நாகபாசத்தை ஏவி சிறைபிடிக்கிறான் (சிவபுராணத்தில் லட்சக்கணக்காண சேனையை அநிருத்தன் வீழ்த்தினான் என்று கூறப்பட்டுள்ளது)

🌼 இந்நிகழ்வு நாரதர் மூலம் கிருஷ்ணருக்கு தெரிகிறார் இதனால் யாதவர்கள் பலரும் சேர்ந்து 18 அக்ரோணி சேனையை திரட்டி பாணாசுரன் மீது போர்தொடுத்து செல்கின்றனர்

🌼 பெற்ற வரத்தினாலும், கொண்ட பக்தியினாலும் சிவபெருமானே பாணாசுரனின் படைக்கு தலைமை தாங்கி நடத்துகிறார்

🌼 சாரங்கபாணி போர்தொடுத்து வர பினாகபானி எதிர்த்து நிற்கும் யுத்தம் சொல்லவா வேண்டும் இதனால் அனைவரும் யுத்தத்தை பார்க்க கூடுகின்றனர்

🌼 சிவபெருமானும் கிருஷ்ணரும் நேருக்கு நேர் எதிர்க்கின்றனர் சிவபெருமான் அக்னி அஸ்திரம் விட கிருஷ்ணர் அதை வருணாஸ்திரம் கொண்டு தடுக்கின்றார் சிவன் வாயு அஸ்திரம் விட கிருஷ்ணர் பிருத்திவி அஸ்திரம் கொண்டு தடுக்கிறார்  இவ்வாறாக தொடங்கிய யுத்தம் கோரமாகிறது சிவன் பிரம்மாஸ்திரம் விட கிருஷ்ணர் பிரம்மசிரா கொண்டு தடுக்கிறார்

🌼 இந்த யுத்தத்தால் சிருஷ்டியே நடுங்குகிறது இந்நிலையில் சிவன் தனது அஸ்திரமான பாசுபதத்தை விடுகிறார் அதிலிருந்து கொடிய மிருகம் முதல் இந்திரனை விட சக்தியான தேவர்களும் வர கிருஷ்ணர் நாராயணாஸ்திரத்தை கொண்டு அவற்றை அழிக்கிறார்

🌼 பிறகு பாணாசுரனுடன் யுத்தம் புரிகிறார் கிருஷ்ணர் ஆயிரம் கரங்களில் ஐந்நூறு வில்லேந்தி வருகிறான் பாணன் கிருஷ்ணர் அவனது அனைத்து விற்களையும் அறுக்கிறார் இதனால் பாணாசுரன் தனது நகருக்கு திரும்புகிறான்

🌼 தற்போது சிவபெருமான் சிவஜ்வரம் எனும் அஸ்திரத்தை விடுகிறார் மூன்று தலைகளை கொண்ட அது 12 சூரியனுக்கு சமமாகும் ஊளிக்காலத்தின்போது இந்நிலையே இருக்கும் அவ்வஸ்திரம் ரூபம் பெற்று அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகையில் கிருஷ்ணர் நாராயணஜ்வரத்தை விடுகிறார் சிவஜ்வரம் எவ்வாறு வெப்பமோ அதுபோல நாராயணஜ்வரம் குளிர்ச்சியை ஏற்படுத்தும் இதனால் நாராயணஜ்வரம், சிவஜ்வரத்தை தடுத்துவிடுகிறது

🌼 பிறகு பாணாசுரன் மீண்டும் யுத்தகளம் வருகிறான் அப்போது கிருஷ்ணர் அவனுடைய ஆயிரம் கரங்களில் நான்கை தவிர மற்றதை வெட்டி எறிகிறார்

🌼 இதனால் சிவபெருமான் கிருஷ்ணரிடம் " கிருஷ்ணா நான் அவனுக்கு அபயம் வழங்கியுள்ளேன் " என்று கூற உடன் கிருஷ்ணர் " தாங்கள் அபயம் அளித்தால் நானும் அளித்ததுபோலே " என்று கூற இறுதியாக சிவபெருமான் பாணாசுரனை உஷாவை அநிருத்தனுக்கே மணமுடித்து வைக்க கூற அவ்வாறே செய்கிறான் பாணாசுரன்

🌼 முன்பே சிரஞ்சீவி தன்மையை பெற்ற பாணாசுரன் கொண்ட பக்தி காரணமாக ஈசனுடன் கயிலை செல்கிறான் என்று பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது ஆனால் சிவபுராணத்தில் பாணாசுரன் கைகள் வெட்டப்பட்டதால் ஏற்பட்ட காயம் மறைந்து இந்த கல்பகாலம் முடியும்வரை இருந்து இறுதியாக விஷ்ணுவின் கையால் மடியும் வரம் பெற்றான் என்று கூறப்பட்டுள்ளது அவ்வாறே சிவகணங்களின் தலைவராக கைலையில் பாணனை சிவன் வைத்தார் என்று கூறப்பட்டு உள்ளது

🌼 பாணாசுரனின் ஆசைப்படியே அநிருத்தனுக்கும் உஷாவிற்கும் பிறந்த விஸ்வஜித் சோனிதபுரத்தை ஆள்கிறார்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

🌼 மேற்கூறிய கதை  சிவபுராணம், விஷ்ணு புராணம், பாகவதம் மற்றும் மகாபாரதத்தில் இராஜசூய யாகத்தில் பீஷ்மர் கிருஷ்ணரை பற்றி கூறுகையிலும் உள்ளது

🌼 கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் " துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனமே " பாணாசுரனிடம் இருந்த அசுரர்கள் அனைவரையுமே அழித்தார் கிருஷ்ணர்

🌼 சிவன் மற்றும் விஷ்ணுவின் திருவிளையாடல்களே இவையனைத்தும்

🌼 தர்மம் காக்க அவதரித்தவர் கிருஷ்ணர் இதனால் சிவபெருமானும் உதவி செய்வது அவரின் கடமையாகிறது

🌼 இதே போல் சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் முன்பே ஒரு யுத்தம் நடந்து இருக்கும் அது தட்ச பிரஜாதிபதியின் யாகத்தின் காரணத்தால் அந்த யுத்தத்தில் தட்சனின் தலை வெட்டப்பட்டு ஆட்டு தலை கிட்டும்

🌼 இதில் விஷ்ணு பகவான் தட்சனுக்கு அபயம் அளித்து தட்சனை காத்து நிற்பார்


👑 இவ்விரு யுத்தத்திலும் இருவரில் ஒருவரும் தோற்கவில்லை என்பது இதை முழுதாக படிப்பவருக்கு புரியும்

🌼 உண்மையில் இராவணனை விட சிறந்த பக்தன் ஆவார் பாணாசுரன் கல்பகால வாழ்வு மற்றும் கைலையில் வாழ்வு இவை இராவணனுக்கும் கிட்டாதவை

🌈 மேலும் உறவுகளே இன்று நாம் பற்பல கோயில்களில் காணும் பாணலிங்கம் பாணாசுரன் பூஜித்த லிங்கங்களே

🌼 மேலும் சாளக்கிராமங்கள் பற்றி சைவத்தில் " பாணாசுரன் சிவபெருமானிடம் பூஜிக்க 14 கோடி லிங்கங்கள் வேண்டினார் அதுவே சாளக்கிரமங்கள் " என்று கூறப்பட்டுள்ளது அதேபோல் வைணவத்தில் விஷ்ணுவே சாளக்கிராமம் என்று கூறப்பட்டுள்ளது இதை முழுமையாக அறிந்தால் சிவ - விஷ்ணு ஒற்றுமையை அறியலாம்

🌼 இவை இல்லாமல் எண்ணிலடங்கா லிங்கங்களை தினம் தினம் பூஜிப்பார் பாணாசுரன்

🌼 பாணாசுரனை நினைத்து பாணலிங்கத்தை வணங்கி மேன்மை பெருவோமாக 

கிருஷ்ணனை புரிந்து வைத்து இருந்த சல்லியன்



கர்ணன் தனக்கு கிருஷ்ணனை போன்ற சாரதி வேண்டும் என்று கேட்டதால் துரியன் சல்லியனிடம் வேண்டுகிறான்

திரிபுராசுரர்களை அழித்த கதை மற்றும் பரசுராமரின் கதையை சொல்லி வாசுதேவரை எடுத்துக்காட்டியும் சல்லியன் கர்ணனுக்கு சாரதியாக இருப்பது சரியே என விளக்குகிறார்

அதற்கு சல்லியனோ ஒரு வேளை அர்ஜுனன் கொல்லப்படுவானாகில் வாசுதேவன் தானே யுத்தகளம் புகுவான் அவ்வாறு நேர்ந்தால் உனது சேனையில் அவரை எதிர்க்க ஒருவரும் நிற்க மாட்டார் இதை உணர்வாய் என்று கூறி சல்லியன் தேரோட்ட சம்மதிக்கிறார் (அந்த ஆதாரத்தை இணைத்துள்ளேன்)

இதுவே உண்மையாகும் ஆனால் அனைத்தும் அவன் லீலையே என்பது வேறு உண்மையில் அர்ஜுனன் எவ்வழியிலாவது வதைக்கப்பட்டு இருப்பானாகில் கிருஷ்ணர் யுத்தத்தை நடத்தி இருப்பார்.

அர்ஜுனன் ஜயத்ரதனை வதைக்கும் போது கூட கௌரவ சேனையில் பலர் அர்ஜுனன் வெற்றி பெறவேண்டும் என்றே பிரார்த்தித்தனர் ஆச்சரியமாக உள்ளது அல்லவா? ?

காரணம் யாதெனில் அன்று கிருஷ்ணரின் தேரோட்டியான தாருகன் கிருஷ்ணரின் ஆணையின் பேரில் கிருஷ்ணரின் ரதத்தை யுத்தத்திற்கு ஆயத்தமாக கிருஷ்ணரின் ஆணையை நோக்கி காத்திருந்தார் ஒருவேளை அர்ஜுனன் மடிவானாகில் கிருஷ்ணன் யுத்தத்தை நடத்துவதே திட்டம் (இதற்கான ஆதாரமும் இணைத்துள்ளேன்)